அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

1/30/14

பகுதி நான்கு : அணையாச்சிதை[ 5 ]

பகுதி நான்கு : அணையாச்சிதை[ 5 ]
இமயமலையின் அடியில் கங்கை கரையிறங்கும் ரிஷிகேசமென்னும் நீலநிறக்காட்டில் கட்டப்பட்ட தவச்சாலையில் காசியின் அரசி புராவதி தங்கியிருந்தாள். அவளே அங்குவரும் முடிவை எடுத்தாள். காலையில் தன் ஆயுதசாலையில் பயிற்சியில் இருந்த பீமதேவனை அவளது சேடி பிரதமை சென்று அழைத்துவந்தபோது அவள் அரச உடைகளைக் களைந்து மரவுரி அணிந்து அரண்மனை வாயிலில் நின்றிருந்தாள். பீமதேவன் அவளைக்கண்டதும் திடுக்கிட்டு “எங்கே செல்கிறாய் தேவி? என்ன வழிபாடு இது?” என்றார்.
அவர் முகத்தை ஏறிட்டு நோக்கி திடமான விழிகளுடன் பேசவேண்டுமென அவள் எண்ணியிருந்தபோதிலும் எப்போதும்போல தலைகுனிந்து நிலம்நோக்கித்தான் சொல்லமுடிந்தது. “நான் ரிஷிகேசவனத்துக்குச் செல்கிறேன். இனி இந்த அரண்மனைக்கு வரப்போவதில்லை”
காசிமன்னர் சற்றே அதிர்ந்து “உன்சொற்கள் எனக்குப் புரியவில்லை…இந்த அரண்மனை உன்னுடையது. இந்த நாடு உன்னுடையது” என்றார். “என்னுடையதென்று இனியேதும் இல்லை. இந்த அரண்மனையில் நான் சென்ற மூன்று மாதங்களாக விழிமூடவில்லை. இங்கே வாழ்வது இனி என்னால் ஆவதுமல்ல…” என்றாள்.
“அதற்காக? நாம் ஆதுரசாலையை அமைப்போம். அங்கே நீ தங்கலாம். காசியின் அரசி தன்னந்தனியாக வனம்புகுந்தால் என்ன பொருள் அதற்கு?” புராவதி பெருமூச்சுடன் “பொருளறிந்து வாழ்வது எவருக்கும் சாத்தியமல்ல அரசே” என்றாள்.
“என் அனுமதி இல்லை உனக்கு” என்று பீமதேவன் திடமாகச் சொன்னார். அரசி “அனுமதியை நான் தேடவுமில்லை. துறவுபூண அனுமதி தேவையில்லை என்று நெறிநூல்கள் சொல்கின்றன.” அவர் மேலே பேசமுற்பட அவள் கண்களைத் தூக்கி “உயிரை மாய்த்துக்கொள்ளவும் எவரும் அனுமதி தேடுவதில்லை” என்றாள்.
திகைத்து, அதன் பொருளென்ன என உணர்ந்து பீமதேவன் அமைதியானார். “என்னை அரசப்படைகளோ சேவகர்களோ தொடர வேண்டியதில்லை. என்னுடன் என் இளம்பருவத்துத் தோழி பிரதமையை மட்டுமே கூட்டிக்கொள்கிறேன்.” என்றாள்.
அவளை நோக்கிக் குனிந்து ஈரம்படர்ந்த விழிகளால் நோக்கி பீமதேவன் கேட்டார் “நான் எப்போதேனும் உன்னைப்பார்க்க வரலாமா?” அவள் அவரை ஏறிட்டுப்பார்க்காமல் சென்று ரதத்தில் ஏறிக்கொண்டாள். சிக்கிக்கொண்ட பலா அரக்கை அறுத்துக்கிளம்பும் ஈபோல அக்கணத்தை தாண்டமுடிந்ததைப்பற்றி அவளே வியந்துகொண்டாள்.
அவள் தன்னுடையதாக ஏற்றுக்கொண்ட நகரம் ஒவ்வொரு கட்டிடமாக உதிர்ந்து பின்சென்றது. பின்னால் அவை உடைந்து குவிவதை அவள் உணர்ந்தாள். அவள் பயணம்செய்து பழகிய சாலை ரதத்துக்குப்பின்னால் அறுந்து அந்தரத்தில் ஆடியது. அவள் வாழ்ந்த அரண்மனை அடியற்ற ஆழத்தில் விழுந்து மறைந்தபடியே இருந்தது.
ரதம் அரச படித்துறைக்கு அப்பால் குகர்களின் சிறுதுறையில் சென்று நின்றது. அங்கே பிரதமை கையில் சிறிய மான் தோல் மூட்டையுடன் நின்றிருந்தாள். புராவதி இறங்கி தேரோட்டியைக்கூட திரும்பிப்பாராமல் சென்று படகில் ஏறிக்கொண்டாள். பிரதமை ஏறி அவள் அருகே அமர்ந்தாள்.
துடுப்பால் உந்தி படகை நீரில் செலுத்திய குகன் இரு தோள்களிலும் கரிய தசைகள் இறுகியசைய துழாவினான். படகு நீர்நடுவே சென்றதும் கயிற்றை இழுத்து பாயை புடைக்க விட்டான். காற்று தன் கைகளில் படகை எடுத்துக்கொண்டபோது பலமாதங்களுக்குப்பின் முதன்முறையாக புராவதி மெல்லிய விடுதலை ஒன்றை அகத்தில் உணர்ந்தாள். கிளம்பிவிடவேண்டும் கிளம்பிவிடவேண்டும் என ஒவ்வொருநாளும் எண்ணி ஒவ்வொரு கணமும் எண்ணி மீண்டும் மீண்டும் ஒத்திப்போட்டிருக்க வேண்டாமென்ற எண்ணம் அவளுக்குள் எழுந்தது.
படகு சென்றுகொண்டிருக்கையில் மெல்லமெல்ல மனம் அமைதிகொள்வதை புராவதி உணர்ந்தாள். உலைந்த மாலையில் இருந்து மலரிதழ்கள் உதிர்வதுபோல அவளுடையவை என அவள் நினைத்திருந்த ஒவ்வொரு நினைவாக விலகின. ஒளிவிரிந்த நீர்ப்பரப்பு கண்களை சுருங்கச்செய்தது. சுருங்கிய கண்களில் மெல்ல துயில் வந்து பரவியது.
பிரதமை குகனிடம் “குகர்களெல்லாம் பாடகர்கள் என்றாயே…பாடு” என்றாள். அவன் “ஆம் தேவி… பாடுவதற்கேற்ற பருவநிலை” என்றபின் பாடத்தொடங்கினான். பிரதமை “இன்று வளர்பிறை பன்னிரண்டாம் நாள். அன்னையின் ஒளிமிக்க தோற்றத்தையே பாடவேண்டும்” என்றாள். “ஆம் அன்னையே” என்றான் குகன்.
“கேளுங்கள், அன்னையின் கதையைக் கேளுங்கள்! எளிய குகன் பாடும்சொற்களில் எழும் அன்னையின் கதையைக் கேளுங்கள்! கோடிமைந்தரைப் பெற்றவளின் கதையைக் கேளுங்கள்” அவன் குரல் படகோட்டிகளின் குரல்களுக்குரிய கார்வையும் அழுத்தமும் கொண்டிருந்தது.
ஆயிரம் காலம் மைந்தரில்லாதிருந்த அவுணர்களான ரம்பனும் கரம்பனும் கங்கை நதிக்கரையில் தவம் செய்தனர். தானறிந்த அனைத்தையும் தன் கனவுக்குள் செலுத்தி கனவுகளை மந்திரத்துள் அடக்கி மந்திரத்தை மௌனத்தில் புதைத்து அந்த மௌனத்தை பெருவெளியில் வீசி ரம்பன் அமர்ந்திருந்தான். அருகிருந்த கரம்பனை முதலை விழுங்கியபோதும் ரம்பனின் தவம் கலையவில்லை.
அந்த ஒருமையைக் கண்டு வியந்து அக்கினி அவனுக்கு முன்னால் தோன்றினான். “நீ விழையும் மைந்தனின் குணமென்ன?” என்றான். “குணங்களில் மேலானது தமோகுணமே. அசுரர்களின் தமோகுணமனைத்தும் ஒன்றாகத்திரண்டு என் மகன் பிறக்கவேண்டும்” என்று வேண்டினான் ரம்பன். அவ்வாறாக அவனுக்கு எருமைத்தலையும் இருள்நிறமும் கொண்ட மகிஷன் பிறந்தான்.
இருள்போல பரவி நிறையும் ஆற்றல் கொண்ட பிறிதொன்றில்லை. தமோகுணம் மாயையையே முதல் வல்லமையாகக் கொண்டது. மகிஷன் தன் மாயையினால் நூறு ஆயிரம் பல்லாயிரமாகப் பெருகினான். ரத்தபீஜன், சண்டன், பிரசண்டன், முண்டன் என்னும் ஆயிரம் சோதரர்களுடன் மண்ணையும் விண்ணையும் மூடினான். இரவு படர்வதுபோல அனைத்துலகையும் போர்த்தி தன்வயமாக்கினான்.
அவனிருளால் சூரியசந்திரச் சுடர்களெல்லாம் அணைந்தன. அக்கினி ஒளியின்றி தாமரை இதழ்போலானான். முத்தும் மணியும் ரத்தினங்களும் கூழாங்கற்களாயின. பூக்களும் இலைகளும் மின்னாதாயின. மூத்தோர் சொற்களெல்லாம் வெறும் ஒலிகளாயின. நூல்களின் எழுத்துக்களெல்லாம் புழுத்தடங்கள் போலாயின.
விண்ணுலகில் முனிவரும் தேவரும் கூடினர். இருளைவெல்ல வழியேதென்று வினவினர். அவர்கள் இணைந்து விஷ்ணுவின் பாதங்களை சரணடைந்தனர். விஷ்ணு அவர்களுடன் மகேஸ்வரனை தேடிச்சென்றார். கைலாயக் குளிர்மலையில் கோயில்கொண்டிருந்த சிவனின் யோகத்துயில் கலைத்து அவர்கள் இறைஞ்சினர்.
“ரம்பன் அறியாமல் வரம் வாங்கவில்லை தேவர்களே. காரியல்புதான் முதலானது. செவ்வியல்பும் வெண்ணியல்பும் கருமையில் ஒளிர்ந்து அடங்கும் மின்னல்களேயாகும்” என்றார் மகாதேவர். “வெண்ணியல்புடன் மோத செவ்வியல்பால் ஆகாது. செவ்வியல்பு காரியல்புடன் இணைந்து மேலும் வேகம் கொண்ட இருளே உருவாகும். முற்றிலும் இருள் தீண்டா அதிதூய வெண்ணியல்பால் மட்டுமே காரியல்பை வெல்லமுடியும்.”
விஷ்ணு பணிந்து “அவ்வாறு ஒரு தூவெண்மை புடவியிலெங்கும் இருக்கமுடியாதே மகாதேவா!” என்றார். “அது மலரின்றி மணமும், விறகின்றி நெருப்பும், உடலின்றி ஆன்மாவும் இருப்பதைப்போல அல்லவா?”
சிவன் புன்னகைசெய்து “ஆம், ஆனால் ரம்பன் பெற்ற வரமேகூட அவ்வாறு ஒரு தூவெண்ணியல்பு உருவாவதற்கான காரணமாகலாமே” என்றார். “கருமை தீண்டாத வெண்குணம் திகழ்வது அன்னையின் மடிமீதிலேயாகும். அன்னையை வணங்குங்கள். அவள் கனியட்டும் உங்கள்மீது” என்றார்.
தேவர்களும் முனிவர்களும் அவரவர் அன்னையை எண்ணி தவம் செய்தனர். மனிதர்களும் மிருகங்களும் அன்னையரை எண்ணி தவம் செய்தன. பூச்சிகளும் கிருமிகளும் தவம் செய்தன. அனைவரும் அவர்கள் அறிந்த அன்னையின் பெருங்கருணைக் கணங்களை சிந்தையில் நிறைத்தனர்.
அக்கணங்களெல்லாம் இணைந்து ஒரு பெரும்பாற்கடலாகியது. அதில் திரண்டு எழுந்ததுபோல ஒரு வெண்ணிற ஒளி எழுந்தது. விந்தியமலைமுகடில் ஒரு குகையில் தவம்செய்துகொண்டிருந்த கார்த்தியாயனர் என்ற முனிவரின் வேள்வி நெருப்பில் அமுதமெனத் திரண்டுவந்தது. அவளே கார்த்தியாயினி. ஈரேழு உலகுக்கும் பேரன்னை.
அத்தனை தேவர்களின் ஒளியும் அவளில் இணைந்தன. மகேந்திரனின் ஒளியால் முகமும், அக்கினியால் முக்கண்ணும், யமனின் ஒளியால் கருங்கூந்தலும், விஷ்ணுவின் ஒளியால் பதினெட்டு வெண்கரங்களும், இந்திரன் ஒளியால் இடையும், வருணன் ஒளியால் அல்குலும், பிரம்மனின் ஒளியால் மலர்ப்பாதங்களும், சூரியகணங்களின் ஒளியால் கால்விரல்களும், வசுக்களின் ஒளியால் கைவிரல்களும், பிரஜாபதிகளின் ஒளியால் வெண்பற்களும், வாயுவின் ஒளியால் செவிகளும், மன்மதன் ஒளியால் விற்புருவங்களும் கொண்டு தேவி எழுந்தாள். அதிதூய வெண்ணியல்புடன் அன்னை விந்தியமலையுச்சியில் கோயில்கொண்டருளினாள்.
வல்லமை மிக்கது காரியல்பு. அனைத்தையும் அணைத்து விழுங்கிச் செரித்து அதுவாவது இருள். பிரம்மம் பள்ளிகொள்ளும் படுக்கை அது. ஆனால் இருளின் மையத்தில் ஒளிவேட்கை சுடர்கிறது. எனவே காரியல்பு வெண்ணியல்புக்காக தேடிக்கொண்டே இருக்கிறது. விண்மேகங்களில் ஊர்ந்த மகிஷன் விந்தியமலையுச்சியில் வெண்குடைபோல எழுந்த அன்னையின் ஒளியைக் கண்டான். அவனை அவன் படைப்பியல்பு கீழே கொண்டுவந்தது. அன்னையின் பேரெழில்கண்டு அவன் பெருங்காதல் கொண்டான்.
அவன் தூதனாக வந்த தம்பி துந்துபியிடம் “என்னை வெல்பவனே என் மணவாளன் என்றுரை” என்றாள் அன்னை. மகிஷன் தன் இருட்படையனைத்தையும் திரட்டி போர்முரசொலிக்க விந்தியமலைக்கு வந்தான். தோள்கொட்டி போருக்கழைத்தான்.
வெண்ணெழில்தேவி வெண்தாமரை மீதமர்ந்தவள். வெண்ணியல்போ போரையே அறியாத தூய்மை. போரை எதிர்கொள்ள தேவி விண்ணாளும் சிவனருளை நாடினாள். ‘நான் குடியிருக்கும் இமயத்தைக் கேள்’ என்றார் இறைவன். காலைவேளை இமயத்தின் வெண்பனிமேல் கவிகையில் எழுந்த செவ்வொளியை ஒரு சிம்மமாக்கி இமயம் அன்னைக்குப் பரிசளித்தது. செவ்வியல்பே சிம்மவடிவமென வந்து அன்னைக்கு ஊர்தியாகியது. சிம்மமேறி மகிஷனை எதிர்த்தாள் அன்னை. விந்தியனுக்குமேலே விண்ணகத்தின் வெளியில் அப்பெரும்போருக்கு மின்னல் கொடியேறியது. இடிமுழங்கி முரசானது.
அன்னையின் அழியா பேரழகில் கண்கள் ஆழ்ந்திருக்க மகிஷன் முப்பத்துமுக்கோடி கைகளால் அன்னைமீது படைக்கலங்களை செலுத்தினான். ஆயிரம் ஊழிக்காலம் அப்போர் நிகழ்ந்தது. மகிஷனின் படைக்கலன்களையெல்லாம் தன்னவையாக்கி அவனுக்கே அளித்தாள் அன்னை. அன்னையரே, ஆடிப்பாவையிடம் போர்புரிபவன் வெல்வது எப்படி?
குன்றா முதிரா காலத்தில் என்றுமுளது என அவர்களின் போர் நிகழ்ந்தது. படைக்கலங்களெல்லாம் அழிய வலுவிழந்து அன்னையின் அடிகளில் விழுந்த மகிஷனை அவள் சிம்மம் ஊன்கிழித்து உண்டு பசியாறியது. மகிஷனின் அழியாபெருங்காதல் இரு கருங்கழல்களாக மாறி அன்னையின் கால்களை அணிசெய்தது. மகிஷன் அவன் வாழ்வின் பொருளறிந்து முழுமைகொண்டான். அவன் வாழ்க!
VENMURASU_EPI_21
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
பாடல் முடிந்தபோது பிரதமை ஒரு மெல்லிய விசும்பல் ஒலியைக்கேட்டு திரும்பிப் பார்த்தாள். அரசி அழுதுகொண்டிருப்பதைக் கண்டு ஏதும் சொல்லாமல் தலைகுனிந்தாள். அவள் மிகமெலிந்து நோயுற்றவள் போல ஆகியிருப்பதை எண்ணி பெருமூச்சுவிட்டாள்.
இரவு கோடிவிண்மீன்களால் ஒளிகொண்டதாக இருந்தது. நதியின் மீது பிரதிபலித்த விண்மீன்கள் வழியாக படகு விண்ணகப்பயணமென முன்னகர்ந்து சென்றது. அப்போதுதான் பிரதமை அவர்கள் இனியொருபோதும் திரும்பப்போவதில்லை என்று உறுதியாக அறிந்தாள்.
ரிஷிகேச வனத்தில் பார்க்கவ முனிவரின் குடிலருகே குடில்கட்டி புராவதி தங்கினாள். ஒவ்வொருநாள் காலையிலும் இருள் விலகுவதற்கு முன்பு கங்கையில் நீராடி, சிவபூசை முடிந்து, முனிவரின் தவச்சாலைக்குச் சென்று பணிவிடைகள் செய்தாள். அங்கிருந்த நான்கு பசுக்களை அவளும் பிரதமையும் காட்டுக்குக் கொண்டுசென்று மேய்த்து மாலையில் மீண்டனர். மாலையில் கங்கையில் குளித்து மீண்டும் சிவபூசைகள் முடித்து தவச்சாலை சேர்ந்தனர்.
ஆனால் விறகை எரித்து அழிக்க முடியா தீயூழ் கொண்ட நெருப்பைப்போல அவள் சிந்தை அவள் மேல் நின்றெரிந்தது. எப்போதும் நெட்டுயிர்த்தவளாக, தனிமையை நாடியவளாக, சொற்களை தன்னுள் மட்டுமே ஓட்டுபவளாக அவள் இருந்தாள். தனிமையில் தலைகுனிந்து அமர்ந்திருப்பவள் இலைநுனியில் கனக்கும் நீர்த்துளிபோல ததும்பித் ததும்பி ஒருகணத்தில் உடைந்தழத் தொடங்கினாள்.
கண்களை மூடினாலும் தெரியும் வெயிலொளி போல அவளுக்குள் அம்பை தெரிந்துகொண்டிருந்தாள். அவளை கருக்கொண்ட நாளில் ஒருமுறை நீர்நிறைந்த யானம் ஒன்றைப் பார்க்கையில் அவள் விசித்திரமான தன்னுணர்வொன்றை அடைந்தாள். நீர் அது இருக்கும் பாத்திரத்தின் வடிவை அடைகிறது என்பது எவ்வளவு மேலோட்டமான உண்மை. பூமியிலுள்ள அனைத்துப் பாத்திரங்களும் நீருக்கு உகந்த வடிவத்தை அல்லவா வந்து அடைந்திருக்கின்றன? அன்று தன் வயிற்றில் கைவைத்து அவள் அடைந்த தன்னிலையே அவளாக அதன் பின் என்றுமிருந்தது.
ஆகவேதான் பீமதேவன் அவள்மேல் அதுவரை பொழிந்த காதலனைத்தையும் அவள் வயிற்றின்மேல் மாற்றிக்கொண்டதை அவள் ஏற்றுக்கொண்டாள். அவள் வயிறு சுமந்த குழந்தையை எண்ணி அவன் கொண்ட பரவசமும் கவலையும் கொந்தளிப்பும் மோனமும் அவளை உவகையிலாழ்த்தின. அவள் ஈற்றறைக்குச் செல்லும்போது மூதன்னை அவள் கையில் காப்பு கட்டி மெல்லக்குனிந்து ‘அரியணை அமர இளவரசன் ஒருவனை பெற்றுக்கொடுங்கள் அரசி’ என்றபோது அவளுக்கு பீமதேவன் ஒரு பெண்ணைத்தான் விரும்புவான் என்ற எண்ணம் எழுந்தது.
அதைப்போலவே அவன் அவளருகே வந்து குனிந்து குழந்தையைப்பார்த்து பரவசத்துடன் “வளரிள பதினான்காம் நாள்…பரணி நட்சத்திரம்…இவள் இளவரசியல்ல…கொற்றவை” என்று சொன்னபோது பீமதேவனின் கண்ணீர்த்துளிகள் அவள் மேல் விழுந்தன. “இருபத்தெட்டாவது நாள் இவளுக்கு பொன்னணிவிக்கவேண்டும் என்றார்கள். இக்கால்களுக்கு அழலன்றி எது கழலாகும்?” என்றான். குனிந்து குழந்தையைத் தொட அவனால் முடியவில்லை “எரியிதழ் போலிருக்கிறாள். இவள் என்னுடலில் இருந்தோ உன்னுடலில் இருந்தோ வரவில்லை அரசி. விறகில் எரியும் அக்கினி போல நம்மில் இவள் நிகழ்கிறாள்” என்றான்.
அவனுடைய புலம்பல்களை அவள் சிரிப்புடன் எடுத்துக்கொண்டாலும் மெல்லமெல்ல அம்பையை அவளே ஒரு நெருப்பாக எண்ணத்தொடங்கினாள். ஒவ்வொன்றையும் நோக்கி கைநீட்டும் வேட்கையே அம்பை. எதையும் தானாக ஆக்கிக்கொள்ளும் தூய்மை அவள். அவளுடைய சினம் கடைசிக்கணம் வரை எரிப்பதாக இருந்தது. உள்ளூர அவள் அம்பையை அஞ்சினாள். ஆனால் அது ஆளும் இறைவிமேல் கொண்ட அச்சம் என்றும் அறிந்திருந்தாள். “எரியும் விறகாக என்னை உணர்கிறேன். இவள் என் தீ” என்று ஒருமுறை அவள் பீமதேவனிடம் சொன்னாள்.
கையிலெடுத்துக் கொஞ்ச, சினந்து அடிக்க எளிய அம்பை ஒருத்தி தேவை என்று அவள் சொன்னபோது பீமதேவன் சிரித்து “ஆம் பெற்றுக்கொள்வோம்” என்றான். இரண்டாவது குழந்தையை குனிந்து நோக்கி சிரித்து “இவள் குளிர்ந்தவள், இவளுக்கு குளிர்ந்த அம்பையின் பெயரிடுகிறேன்” என்று சொல்லி அம்பிகை என்று பெயரிட்டான்.
அதன்பின் சிலவருடங்கள் கழித்து அவளுடனிருக்கையில் “என் மடியின் தவிப்பு அடங்கவில்லை. அம்பையை ஒரு விளையாட்டுப்பெண்ணாக எனக்குக் கொடு. தேவியர் மூவர் என்றுதானே நூல்களும் சொல்கின்றன” என்று கேட்டு அம்பாலிகையை பெற்றுக்கொண்டான். விழிகளால் அம்பையையும் கைகளால் அம்பிகையையும் உதடுகளால் அம்பாலிகையையும் கொஞ்சினான்.
மூன்று மகள்களுடன் ரதத்தில் செல்லும்போது உஷையும் சந்தியையும் ராத்ரியும் துணைவரும் சூரியன்போல தன்னை உணர்வதாக பீமதேவன் அவளிடம் சொல்வான். “நாடாள மகனில்லையே என என்னிடம் கேட்கிறார்கள். இந்நகரில் நித்திலப்பந்தல் அமைத்து என் மகள்களுக்கு சுயம்வரம் வைப்பேன். ஒன்றுக்கு மூன்று இளவரசர்கள் என் நாட்டை ஆள்வார்கள்” என்று சிரித்தான்.
தனிமையில் மரநிழலில் அமர்ந்திருக்கையில் புராவதி அழத்தொடங்கினால் பிரதமை தடுப்பதில்லை. அழுது கண்ணீர் ஓய்ந்து மெல்ல அடங்கி அவள் துயில்வது வரை அருகிருப்பாள். பின்பு பிறவேலைகளை முடித்துவந்து மெல்ல எழுப்பி குடிலுக்கு கூட்டிச்செல்வாள். இரவிலும் புராவதி தூங்குவதில்லை. விழிப்பு கொள்கையில் இருட்டில் மின்னும் புராவதியின் கண்களைக் கண்டு பிரதமை நெடுமூச்செறிவாள்.
ஒருநாள் புராவதி ஒரு கனவு கண்டாள். தவழும் குழந்தையான அம்பை இடையில் கிண்கிணி மட்டுமே அணிந்தவளாக விரைந்து செல்லக்கண்டு அவள் கூவியழைத்தபடி பின்னால் சென்றாள். படியிறங்கி உள்முற்றம் சென்ற குழந்தை அங்கே புகைவிட்டெரிந்த தூப யானத்தின் செங்கனலை அள்ளி அள்ளி வாயிலிட்டு உண்ணத்தொடங்கியது. ஓடிச்சென்று அதை அள்ளி எடுத்து வாயைத்திறந்து பார்த்தாள். வாய்க்குள் வேள்விக்குளமென செந்நெருப்பு எரிந்துகொண்டிருந்தது.
அழுதுகொண்டு கண்விழித்த புராவதி பார்க்கவரிடம் அதன் பொருளென்ன என்று கேட்டாள். “உன்குழந்தை தீராப்பெரும்பசியுடன் எங்கோ இருக்கிறாள்” என்றார் முனிவர். “அய்யனே, அவள் எங்கிருக்கிறாளென நான் எப்படி அறிவேன்? என் குழந்தையின் பெரும்பசியை நான் எப்படிப்போக்குவேன்?” என புராவதி அழுதாள்.
முனிவர் “காணாதவர்களின் பசியைப்போக்கும் நூல்நெறி ஒன்றே. காண்பவர் ஆயிரம்பேரின் பசியைப்போக்கு. வேள்விக்குப்பின் சேரும் அபூர்வம் எனும் பலன் உனக்கிருக்கும். எங்கோ எவராலோ உன் மகள் ஊட்டப்படுவாள்” என்றார்.
பின்னர் பார்க்கவமுனிவர் மண்ணில் வினாக்களம் அமைத்து பன்னிரு கூழாங்கற்களையும் ஏழு மலர்களையும் வைத்து மூதாதையரிடம் வினவிச் சொன்னார். “உன் மகள் தட்சனின் மகளாய்ப்பிறந்து எரியேறிய தாட்சாயணியின் துளி என அறிவாயாக! கங்கைக்கரைக்காட்டில் நாகர்களின் ஊரான கங்காத்வாரம் உள்ளது. அங்கே தாட்சாயணி எரிபுகுந்த குண்டத்தை நாகர்கள் நிறுவி வழிபடுகிறார்கள். அங்கே சென்று ஆயிரம் பயணிகளுக்கு அன்னம் அளி. உன் மகள் அந்த அன்னத்தை அடைவாள்.”
காசிமன்னருக்கு தூதனுப்பி உணவுச்சாலை அமைக்கும்படி புராவதி கோரினாள். அவ்வண்ணமே காசிமன்னர் அறச்சாலையொன்றை அங்கே அமைத்தார். அதன் முதல்நாள் பூசைக்காக புராவதி ரிஷிகேசம் நீங்கி கங்காத்வாரம் சென்றாள். கிளைபின்னிச் செறிந்த ஆலமரங்களில் நாகங்கள் விழுதுகளுடன் தொங்கி நெளியும் இருண்ட காட்டுக்குள் சென்ற ஒற்றையடிப்பாதை வழியாக பிரதமையுடன் நடந்து சென்று நாகர்களின் கிராமத்தை அடைந்தாள்.
கங்காத்வாரத்தில் நூறு நாகதெய்வங்களின் கோயில்கள் இருந்தன. சண்டியன்னைகள், நாகதேவிகள், பிடாரிகள், ஏழன்னைகள். தெற்கே சாலவனக் காட்டுக்குள் தாட்சாயணியின் எரிகுளம் இருந்தது. பாரதவர்ஷமெங்கும் இருந்து நாகர்கள் பயணிகளாக அங்கே வந்து கங்கையில் நீராடி எரிகுளத்து அன்னையை வணங்கிச் சென்றனர். அவர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட குடில்கள் மரக்கிளைகள் மேல் இருந்தன. அவற்றின் கூரைகளிலும் கம்பங்களிலும் நாகங்கள் நெளிந்து நழுவிச்சென்றன.
அன்னசாலையில் அவளைக் கண்டதும் அமைச்சர் நடுவே இருந்து எழுந்து ஓடிவந்த பீமதேவன் அவள் கண்களைக் கண்டதும் தன் மேலாடையை சரிசெய்தபடி தயங்கி நின்றார். “அரசியே, உன் ஆணைப்படி அன்னசாலை அமைக்கப்பட்டுள்ளது” என்றார். “ஒவ்வொரு நாளும் இங்கு வரும் அனைவருக்கும் உணவளிப்போம். இரவும் பகலும் இங்கே அதற்காக ஏவலரை அமைத்திருக்கிறேன்.”
புராவதி “நான் அரசி அல்ல” என்றாள். “உன் கண்களைப்பார்த்தேன் தேவி. இன்னும் உன் அனல் அவியவில்லையா என்ன?” என்று பீமதேவன் கண்ணீருடன் கேட்டார். “என் சிதையெரிந்தாலும் எரியாத அனல் அது” என்று புராவதி சொன்னாள். தாடை உரசி பற்கள் ஒலிக்க “என் குழந்தை மாளிகை வாயிலில் வந்து நின்றாள் என அறிந்த நாளில் என்னுள் அது குடியேறியது” என்றாள்.
சினத்துடன் “தேவி நீயும் ஓர் அரசி. நாடாண்டவன் பெற்ற மகள் நீ. களப்பலிக்கென்றே மைந்தரைப் பெறவேண்டியவள். நாம் உயிராசையாலோ உறவாசையாலோ கட்டுண்டவர்களல்ல. நம் நெறியும் வாழ்வும் நம் நாட்டுக்காகவே. நான் செய்தவையெல்லாம் காசிநாட்டுக்காக மட்டுமே. போர் வந்து என் குடிமக்கள் உயிர்துறப்பதைவிடக் கொடிதல்ல என் மகள் அழிந்தது…” என்றார்.
அச்சொற்கள் அவருக்களித்த உணர்ச்சிகளால் முகம் நெளிய, கண்ணீருடன் “விண்ணிலேறி மூதாதையரை சந்திக்கையில் தெளிந்த மனத்துடன் அவர்கள் கண்களைப்பார்த்து நான் சொல்வேன். என் தந்தையரே, நீங்கள் எனக்களித்த பணியை முடித்திருக்கிறேன், என்னை வாழ்த்துங்கள் என. அவர்களின் முதுகரங்கள் என் சிரத்தைத் தொடும். அதிலெனக்கு எந்த ஐயமும் இல்லை…” என்றார்.
சிவந்தெரிந்த முகத்துடன் புராவதி “ஒன்றுசெய்யுங்கள். நிமித்திகரை அழைத்து என் நெஞ்சிலெரியும் கனலா இல்லை உங்கள் தேசத்தில் அடுமனையிலும் வேள்வியிலும் எரியும் நெருப்பா எது அதிகமென்று கேளுங்கள்” என்றாள்.
“கேட்கவேண்டியதில்லை. அவளை அகற்றியமைக்காக ஒருநாள்கூட நான் துயிலிழக்கவில்லை. அதுவே எனக்குச் சான்று’ என்று பீமதேவன் சொன்னார். அவள் இறுகிய தாடையுடன் நிற்க அவளை சிலகணங்கள் நோக்கிவிட்டு பார்வையை திருப்பிக்கொண்டார்.
“அவளை நினைப்பதில்லையா?” என்றாள் புராவதி. பீமதேவன் தலையை இறுக்கமாக இன்னொரு பக்கமாக திருப்பிக்கொண்டார். “அவளை எப்போதாவது மறந்திருக்கிறீர்களா?” என்று புராவதி மீண்டும் கேட்டாள். கோபத்துடன் வாளை பாதி உருவி திரும்பிய பீமதேவன் தன் அனைத்து தசைநார்களையும் மெல்ல இழுத்துக்கொண்டு தன் உடலுக்குள்ளேயே பின்னடைந்தார். அவரது தோள்கள் துடித்தன. திரும்பிப்பாராமல் விலகிச்சென்றார். புராவதி புன்னகைத்துக் கொண்டாள். தீப்பட்டு எரிந்த சருமத்தில் தைலம் வழிவதுபோலிருந்தது.
அன்னசாலையில் நூற்றுக்கணக்கான பயணிகளும் இரவலர்களும் உணவை வாங்கி மரத்தடிகளுக்குச் சென்று உண்ட ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. உணவுபரிமாறுபவர்கள் சங்கை ஒலித்து உணவுக்கு பயணிகளையும் துறவிகளையும் அழைத்துக் கொண்டிருந்தனர். முற்றிலும் உடைதுறந்த நாகத்துறவிகள் திரிசூலமும் விரிசடையும் சாம்பல்பூசிய உடலுமாக உணவுக்குச் சென்றனர். பலர் கழுத்தில் நாகப்பாம்புகளை அணிந்திருந்தார்கள். ஒருவர் பிணத்தில் இருந்து எடுத்த பெரிய தொடையுடன் கூடிய கால் ஒன்றை தன் தோளில் வைத்திருந்தார்.
நாகத்துறவிகள், அவர்களைக் கண்டதும் அஞ்சி விலகி ஓடிய இரவலரை நோக்கி சிரித்துக்கொண்டு தங்கள் முத்தண்டங்களால் தரையை அடித்து ஒலி எழுப்பினர். உணவை கைகளிலேயே வாங்கி உண்டனர். உணவு உண்டபடியே உரக்கக் கூச்சலிட்டு நடனமிட்டனர். ‘சிவோஹம் !சிவோஹம்!’ என ஆர்ப்பரித்தனர்.
புராவதி கங்கையில் குளித்து ஈர உடையுடன் தட்சவனத்தை அடைந்தாள். படர்ந்த ஆலமரத்தடியில் ஆயிரம் நாகச்சிலைகள் படமெடுத்து மஞ்சள்பூசி குளிர்ந்து அமர்ந்திருந்தன. அவற்றின் நடுவே அமைந்திருந்த கல்லாலான சிறிய வேள்விக்குளத்தில் செந்நெருப்பு சுளுந்துகளில் நெய்யுண்டு நின்றெரிந்துகொண்டிருந்தது. வலப்பக்கத்தில் தட்சன் நூறு உடல்சுருள்களுடன் விழித்தவிழிகளுடன் அமர்ந்திருந்தான்.
அந்த நெருப்பையே நோக்கி நின்ற புராவதியின் இமைகள் மூடவில்லை. கருஞ்சடைக்கற்றைகளுடன் அங்கிருந்த பூசகன் “வணங்குங்கள் அன்னையே” என்றான். அதை அவள் வெறும் அசைவாகவே கண்டாள். எங்கிருக்கிறாள் என்றே அவளுக்குத் தெரியவில்லை. அவன் மேலும் கைகாட்டியதும் திடுக்கிட்டு விழித்து அவள் வணங்கி வழிபடுவதற்காக குனிந்தபோது கால்கள் தளர ‘அம்பை!’ என முனகி நினைவிழந்து நெருப்பில் விழுந்தாள்.
பீமதேவன் கூவியயபடி அவளைப் பிடித்து தூக்கிக்கொண்டார். பூசகர்கள் ஓடிவந்து அவளைத் தூக்கிக் கொண்டுசென்றனர். அவள் முகமும் ஒரு கண்ணும் நெருப்பில் வெந்திருந்தன. பச்சிலைச்சாற்றை அவள்மேல் ஊற்றி அள்ளித்தூக்கிக் கொண்டுவந்து வெளியே அமர்த்தினார்கள். அரசசேவகர்கள் ஓடிவந்து நிற்க பீமதேவன் “அரண்மனை மருத்துவர் என் படைகளுடன் இருக்கிறார். அவரை கூட்டிவருக!” என்று ஆணையிட்டு முன்னால் ஓடினார்.
அப்பால் நாகத்துறவிகளில் ஒருவர் திரும்பி புராவதியை நோக்கி கைசுட்டி உரக்கச்சிரித்து “நெருப்பையே நினைத்தவளை நெருப்பும் அறிந்திருக்கிறான்” என்றார். அவர்களுக்கு அப்பாலிருந்து கருகிவற்றிய முலைகள் ஆட, அகழ்ந்தெடுத்த வேர்போல மண்படிந்த உடலுடன், சடைமுடிவிரித்து தன்னுள் தானே பேசியபடி மெல்ல ஆடிச்சென்ற பித்தி புராவதியை கடந்து சென்றாள்.
புராவதியின் அகம் மணலில் வற்றும் நீர் போல மறைந்துகொண்டிருந்தது. அவள் கண்களுக்குமேல் மதியவெயில் பொழிய அவள் சித்தத்துக்குள் ஒரு வெண்கடல் அலையடித்து விரிந்தது. அதன் நடுவே விரிந்த வெண்தாமரையில் அவளுடைய தெய்வம் வெண்கலை உடுத்தி நிலவெழுந்ததுபோல அமர்ந்திருந்தது. புராவதி நடுங்கும் உதடுகளால் ‘அம்பை அம்பை’ என உச்சரித்துக்கொண்டிருந்தாள். கண்களை அழிக்கும் வெண்மை, நிறங்களெல்லாம் கரைந்தழியும் வெண்மை. இரு கரியகழல்கள். அவையும் வெண்மைகொண்டு மறைந்தன.
பீமதேவர் மருத்துவருடன் வந்து புராவதியைப் பார்த்தபோது கூப்பிய கரங்களுடன் அவள் இறந்திருந்தாள்.

No comments:

Post a Comment